வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்: எஸ்.குருமூர்த்தி


உள்துறை அமைச்சரின் ஊரறிந்த பொய் மூட்டைகள்: எஸ்.குருமூர்த்தி


"சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் விபத்து மற்றும் மெக்கா மஸ்ஜித், மலேகாவ்ன் வெடிகுண்டு சம்பவங்கள் எல்லாவற்றின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. இருந்தது. மேலும் இவையிரண்டும் நடத்துகின்ற பயங்கரவாதிகளுக்கான பயிற்சி மையங்கள் மூலம் ஹிந்து பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இம்மாதம் 20-ஆம் தேதி வாய் மலர்ந்து அருளியிருக்கிறார். அப்படி இவர் சொன்ன மறுநாளே பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத் ஆர்.எஸ்.எஸ்.-ûஸ தடை செய்யக் கோரி அறிக்கை விடுகிறார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். மீதான பாகிஸ்தானுடைய லஷ்கர் இ தொய்பாவின் குற்றச்சாட்டுக்கு நமது அமைச்சர் சாட்சியாகிறார். முதலில் 68 சக பயணிகள் கொலையுண்ட, பாகிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி நாம் இதுவரை அறியவந்துள்ள கண்டுபிடிப்புகளை அலசுவோம்.
லஷ்கர் இ தொய்பாவே குற்றவாளி என்று கூறும் அமெரிக்க அரசும், ஐ.நா.சபையும்: மற்ற இயக்கங்களுடன் ஒத்துழைக்க உதவும் தலைவராக காஸ்மானி அரிஃப் எனும் பயங்கரவாதி லஷ்கர் இ தொய்பாவுடன் இந்தியாவில் பானிப்பட்டில் நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் சதி உள்பட பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.
இப்படித்தான் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பொருளாதாரக் கட்டுப்பாட்டுக் குழுவின் 29.6.2009 தேதியிட்ட தீர்மானம் எண்: 1267-ல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தாவூத் இப்ராஹிம் கொடுத்த பண பலத்துடன் இவர் மேலும் பணம் சேர்த்து லஷ்கர் இ தொய்பாவுக்கும் அல்-காய்தாவுக்கும் உதவியிருக்கிறார் என்றும் சொல்லி, அவர்களின் அந்த உதவிக்குக் கைமாறாக பானிப்பட்டில் 2007 பிப்ரவரியில் நடந்த சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் சதிக்கு ஆள்பலம் கொடுத்து உதவியிருக்கிறது என்றும் அந்தத் தீர்மானம் திட்டவட்டமாகச் சொல்கிறது. அந்த விவரமெல்லாம் ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் உள்ளவைகளே.
அது வெளியிடப்பட்ட 2 நாள்கள் கழித்து 2009 ஜூலை 1-ல் அமெரிக்க அரசு நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு இப்படி சொல்கிறது: காஸ்மானி அரிஃப் லஷ்கர் இ தொய்பாவுடன் கை கோத்துக்கொண்டு சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் சதி உள்பட பல பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். அவர்களது நிர்வாக ஆணை எண் 13224-ல் இந்த காஸ்மானி உள்பட 4 பேர் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தச் செய்திக் குறிப்பு இன்னமும் அமெரிக்க அரசாங்கத்தின் இணையதளத்தில் இருக்கிறது. இப்படியாக ஐ.நா. பாதுகாப்பு சபையும், அமெரிக்க அரசும் லஷ்கர் இ தொய்பாவையும், காஸ்மானியையும், தாவூத் இப்ராஹிமையும் சம்ஜெளதா சதியில் குற்றவாளிகள் என்று அறிவித்திருக்கின்றனர். ஆக, லஷ்கர் இ தொய்பாவையும், பாகிஸ்தானையும் குற்றவாளிகளாகக் காட்டும் பல ஆதாரங்களில் இதுதான் முதலாவது.
பாகிஸ்தான் அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்:
ஐ.நா.வும் அமெரிக்க அரசும் லஷ்கர் இ தொய்பா மீதும், காஸ்மானி மீதும் கட்டுப்பாடுகள் விதித்து 6 மாதங்கள் கழிந்தபின், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரான ரஹ்மான் மாலிக்கே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சம்ஜெளதா சதியில் பங்கு இருந்ததை ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவர்கள் இந்த சம்பவத்தில், இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தான் அவர்களை வேலைக்கு அமர்த்தினார் என்றும் சந்தடி சாக்கில் எடுத்துவிட்டார் (இந்தியா டுடே ஆன்லைன் 24.1.2010).
சம்ஜெளதா சதியில் ஹெட்லியின் பங்கு அமெரிக்காவின் கண்டுபிடிப்பு:
ஐ.நா. மட்டுமல்ல, அமெரிக்க அரசு மட்டுமல்ல, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரின் ஒப்புதலும் கூட அல்ல, அமெரிக்காவில் உள்ள தனியார் ஆய்வுகள் இந்த விஷயத்தில் இதற்கும் மேலான உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கின்றன. சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கப் பத்திரிகையாளரான செபாஸ்டியன் ரோடெல்லா என்பவர் தனது ஆய்வுகள் மூலம் கிடைத்த துப்புகள் குறித்தும், 2008 மும்பை நகரத் தாக்குதல் குறித்தும் "அமெரிக்க உளவுத் துறைகளுக்கு கிடைத்த முன்னெச்சரிக்கை' என்ற தலைப்பு கொண்ட தனது அறிக்கையில் இப்படி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்:
தனது கணவர் டேவிட் கோல்மன் ஹெட்லி சம்ஜெளதா சதியில் சம்பந்தப்பட்டிருந்ததாக தன்னிடம் 2008-ல் சொல்லியதாக அவரது மூன்றாம் மனைவியான ஃபெய்சா ஒளதுல்லா கூறியுள்ளார். அந்தத் தகவல் 2010-ல் வெளியிடப்பட்டது. மேலும் தனக்குத் தெரியாமல் தானும் அதில் சம்பந்தப்படுத்தப்பட்டதாகவும் ஒளதுல்லா சொல்லியிருக்கிறார். (ஆதாரம்: 5.11.2010 தேதியிட்ட வாஷிங்டன் போஸ்ட்). சில நாள்களுக்குப் பின், இதன் தொடர்ச்சியாக ஒளதுல்லா பாகிஸ்தானில் இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்குச் சென்று 2008-ல் நடந்த மும்பைத் தாக்குதல் பற்றிய துப்பு கொடுக்கும் போதும், ஹெட்லிக்கு சம்ஜெளதா சதியில் இருந்த தொடர்பு பற்றி மறுமுறையும் சொன்னதாக ஏப்ரல் 2008-ல் ரோடெல்லா எழுதுகிறார்.
ஆக, இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள், சம்ஜெளதா தாக்குதலில் லஷ்கர் இ தொய்பாவின் பங்கு பற்றி குறைகூறி பேசிக்கொண்டிருந்தாலும், இன்னமும் முடியாத சம்ஜெளதா வழக்கில் ஹெட்லியை குற்றவாளிக் கூண்டில் அமெரிக்கா நிறுத்தவில்லை என்று ரோடெல்லா எழுதுகிறார் (14.11.2010 வாஷிங்டன் போஸ்ட்). இப்படியாக அமெரிக்காவில் நடுநிலையாக நடந்த தனியார் விசாரணையிலும் சம்ஜெளதா சதியில் பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவும் பங்கு பெற்றது பற்றி தெளிவாகிறது.
மயக்க மருந்துச் சோதனையில் தெளிவான "சிமி'யின் (SIMI) பங்கு: 
2007-ல் சம்ஜெளதா சதியைப் பற்றிய விசாரணை துவங்கியதுமே அதில் "சிமி'யின் (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) பங்கும், லஷ்கர் இ தொய்பாவின் பங்கும் தெளிவாகத் தெரிந்தது (இந்தியா டுடே 19.9.2008). "மும்பை ரயில் மற்றும் சம்ஜெளதா ரயில் குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானின் சதி' என்ற தலைப்பிட்ட கட்டுரையில், சம்ஜெளதா சதியில் லஷ்கர் இ தொய்பா மற்றும் பாகிஸ்தானின் நாச வேலைகளைப் பற்றி விவரமாக நகோரி என்பவர் சொன்னதை "இந்தியா டுடே' சுட்டிக்காட்டி இருந்தது. அந்தக் கட்டுரை "சிமி'யின் தலைவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அதிகாரப்பூர்வமாக தகவல் பெற்றதன் அடிப்படையில் எழுதப்பட்டது. "சிமி'யின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி, அவரது சகோதரன் கம்சோரி நகோரி மற்றும் அமில் பர்வேஜ் போன்ற "சிமி' தலைவர்களுக்கு, சம்ஜெளதா சதி நடந்து 3 மாதங்களுக்குப் பின், 2007 ஏப்ரலில் பெங்களூரில் நடத்திய மயக்க மருந்துச் சோதனை மூலம் கண்டறிந்த தகவல்கள் தமக்குக் கிடைத்ததாக 'இந்தியா டுடே' பத்திரிகை அவற்றை வெளியிட்டுச் சொன்னது.
அந்தச் சோதனை மூலம், இந்திய எல்லைக்கு அப்பால் இருந்த பாகிஸ்தான் குடிமக்கள் சிலரின் உதவியால் "சிமி'யைச் சார்ந்த சில உறுப்பினர்கள் சம்ஜெளதா சதியை இயக்கியதாகவும், அதில் சப்தார் நகோரிக்கு நேரடிப் பங்கு இல்லை என்றும், எஹ்தேஷம் சித்திக்கி மற்றும் நாசிர் என்ற 2 "சிமி' உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டதாகவும், சகோதரன் நகோரி உள்ளிட்ட மேலும் சிலர் அதில் பங்கு பெற்றதாகவும் தெரியவந்தது. மேலும் இந்தூர் கடாரியா மார்க்கெட்டில் இருந்து, வெடிகுண்டு வைக்கப்போகும் பெட்டிக்கான உறையை பாகிஸ்தானியர்கள் வாங்கியதாகவும், அவர்களுக்கு "சிமி'யின் உறுப்பினர் ஒருவர் உறையைத் தைக்க உதவியதாகவும் பல விவரங்கள் வெளிவந்தன. சம்ஜெளதா குண்டுவெடிப்பில் மொத்தம் 5 குண்டுகள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான காலம்தாழ்த்தி வெடிக்க உதவும் கருவியும் பெட்டியில் வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
மகாராஷ்டிர போலீஸின் திரிபு வேலைகள்:
இப்படியாக உலகமே அறிந்துள்ள உண்மைகளைத் தொடர்ந்து தேவையான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை, சதியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மேல் இருந்த பழி இந்துக்களின் மேல் எப்படி திசை திருப்பப்பட்டது, 2008-ல் நடந்த மலேகாவ்ன் வெடிகுண்டு சதியையும், சம்ஜெளதா சதியையும் பிணைக்கும் ஒரு மகா சதியில் மகாராஷ்டிர போலீஸில் சிலர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று இதனால் சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. நவம்பர் 2008-ல் நடந்த சம்ஜெளதா சதியில் பாகிஸ்தான் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக "சிமி'யும் ஈடுபட்டதாக இவ்வளவு வெளிப்படையான காரணிகள் இருக்கும்போது, மொத்தமாகவே திசை திருப்பும்முகமாக, மலேகாவ்ன் சதியில் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து தந்ததில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட படை வீரர் கர்னல் புரோஹித், சம்ஜெளதா சதிக்கும் பகவான் என்பவர் மூலம் வெடிமருந்து கொடுத்து உதவினார் என்று தனி அமர்வு நீதி மன்றத்தில் அரசு வக்கீல் மூலமாக மகாராஷ்டிரத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏ.டி.எஸ்.) குற்றம்சாட்டியது (இந்தியன் எக்ஸ்பிரஸ் 15.11.2008).
அடுத்த 48 மணி நேரத்துக்குள்ளாகவே இந்தியா டுடே ஆன்லைன் (17.11.2008) அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி.) நடத்திய சோதனை மூலம் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து அதில் உபயோகிக்காததையும், பொட்டாசியம் குளோரேட் உபயோகிக்கப்பட்டிருப்பதையும் சம்ஜெளதா சதியைத் துப்புத் துலக்கியவர்கள் தனக்குச் சொன்னதாக விவரங்களை வெளியிட்டது. அது தவிர, அன்றைய உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டீல் செய்தியாளர்கள் சந்திப்பில் சம்ஜெளதா சம்பவத்தில் ஆர்.டி.எக்ஸ். உபயோகிக்கவில்லை என்றும், வேறு ஏதோ புதிய மருந்து உபயோகித்துள்ளனர் என்றும் சொன்னதை அதே பத்திரிகை நினைவூட்டிச் சொன்னது. உடனே அன்றே (17.11.2008), படை வீரர் புரோஹித் சம்ஜெளதா சதியில் சம்பந்தப்பட்டார் என்ற தனது முந்தைய அறிக்கையை வக்கீல் மூலம் ஏ.டி.எஸ். திரும்பப் பெற்றது (தி ஹிந்து 19.11.2008).
ஆனாலும் ஏ.டி.எஸ்.ஸின் அறிக்கை, அடுத்து வந்த 48 மணி நேரத்தில், வெறும் வாயை மெல்லும் எதிரிகளுக்குத் தேவையான அவலைக் கொடுத்தது போல ஆகிவிட்டது. குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டிய பாகிஸ்தானோ, இந்தியாவுடன் அப்போது வரவிருந்த நவம்பர் 25, 2008 செயலாளர்கள் நிலைக் கூட்டத்தில், சம்ஜெளதா சம்பவத்தில் வீரர் புரோஹித்தின் பங்கு பற்றி வினா எழுப்பப் போவதாக அறிவித்தது. இறுதியாக, சம்ஜெளதா சதிக்கு கர்னல் புரோஹித் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொடுக்கவில்லை என்று மகாராஷ்டிரத்தின் ஏ.டி.எஸ். அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஜனவரி 20, 2009-ல் அறிவித்தது.
இப்படித்தான் சம்ஜெளதா சதியின் பொறுப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களான லஷ்கர் இ தொய்பா மற்றும் "சிமி' குழுவிலிருந்து, முதலில் வீரர் புரோஹித்தின் மேல் விழுந்து, பின்பு அவர் மூலம் காவி நிறத்துக்கு வந்தடைந்தது. இப்படி அதிரடியாக பழி திசை திரும்பியதற்குக் காரணமான அறிக்கையை விடுத்த மகாராஷ்டிர போலீஸில் அதற்கு எவரெவர் காரணமாயிருந்தனர் என்பதைத் துப்புத் துலக்க ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. அதுதான் முந்தைய காலத்தில் இருந்து அந்த போலீஸில் ஊடுருவிய தாவூத் இப்ராஹிமின் செல்வம் விளையாடக்கூடிய வினை.
அமைச்சர் ஷிண்டே உண்மையைத்தான் சொல்கிறார் என்று எவராவது சொன்னால், காஸ்மானி, தாவூத், லஷ்கர் இ தொய்பா பற்றி அமெரிக்க அரசும், ஐ.நா.வும் சொல்வது பொய் என்றாகிறது. மேலும் ஒளடால்ஹாவும், வாஷிங்டன் போஸ்டும் கூட லஷ்கர் இ தொய்பா மற்றும் பாகிஸ்தானை வேண்டுமென்றே சந்தியில் இழுக்க என்றும் பொய் சொல்கிறது. "சிமி' தலைவர்களைச் சோதித்து நடந்ததை அறிந்ததும் பொய்யே, பாகிஸ்தானின் ரஹ்மான் மாலிக் சொல்வது என்று இப்படி எல்லோருமே பொய் சொல்கிறார்கள் என்றுதானே ஆக முடியும்? இதைவிட கேவலமானது என்று வேறு ஏதாவது இருக்க முடியுமா?
உண்மைக்குப் புறம்பான இந்தக் கூற்று, குறிப்பிட்ட வாக்காளர்களை வசீகரிக்கும் எண்ணத்துடன் பேசும் ஷிண்டே அவர்களின் பொய்யுரை அன்றி வேறு என்ன? சம்ஜெளதா சதி பற்றிய கணிப்பில் இப்படி இவர்கள் தடம் புரண்டனர் என்றால், 2006-ல் நடந்த மலேகாவ்ன் சம்பவத்திலோ மகாராஷ்டிரத்தின் ஏ.டி.எஸ். அமைப்பின் குற்றப் பத்திரிகையிலேயே "சிமி'யின் தொண்டர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் என்று அவர்களே சொன்னதாகப் பதிவு செய்தும், அப்படி ஒப்புக்கொண்டவர்களை அதிலிருந்து மீட்டு காப்பாற்றவும், இந்துக்கள் சிலர் மேல் பழி போடவும் சி.பி.ஐ. அமைப்பு முயற்சிக்கின்றது.
ஆக மலேகாவ்ன் வழக்கு, விநோதமாக, சாட்சி சொல்பவர்களையே எதிர் சாட்சி சொல்லவைத்து வாதியைப் பிரதிவாதியாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கர்னல் புரோஹித்தும் அவரது கூட்டாளிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பாகவத்தையும், முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இந்திரேஷ் குமாரையும், அவ்விருவரும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யிடம் இருந்து கையூட்டு பெற்றதனால், கொலை செய்யத் திட்டமிட்டதாகக் காட்ட, சாட்சியங்களைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்கள் (அவுட்லுக் 19.7.2010). நம் தேசத்தின் எதிரிகளே ஒழிக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். எப்படி அவர்களுடன் கை கோத்துச் செயல்பட்டிருக்க முடியும்? ஷிண்டே அவர்களுக்கு தான் என்ன பேசுகிறோம் என்று தெரிகிறதா?
இதனால் நிரூபணம் ஆவது என்னவென்றால்: அகில உலக பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஹபீஸ் சயீதுதான், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஒழிக்க நினைக்கும் நமது அமைச்சர் ஷிண்டேயின் தோழன். சில ஆயிரம் வாக்குகளை மனத்தில் வைத்துக்கொண்டு செயல்படும் இத்தகைய ஷிண்டே இன்னும் என்ன மாதிரியான பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக